இலங்கை சுழற்பந்து சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க ஐபிஎல் தொடரில் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணியில் இணைவதில் இன்னும் சந்தேகம் இருப்பதோடு அவர் அணியுடன் இணைவது எப்போது என்பது தொடர்பிலும் இன்னும் உறுதியாக அறிவிக்கவில்லை என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லக்னோ அணியால் இந்திய நாணயப்படி 2 கோடி ரூபாவுக்கு வாங்கப்பட்ட ஹசரங்க உபாதையில் இருந்து மீண்டு வருவதோடு, அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபையின் தடையில்லா சான்றிதழை பெற வேண்டி ஏற்பட்டுள்ளது. இதற்கு அவர் கட்டாய உடல் தகுதி சோதனையில் பங்கேற்க வேண்டும்.
இந்நிலையில் ஹசரங்க தொடர்பில் தெளிவான தகவல்கள் இல்லை என்று லக்னோ அணி நிர்வாகம் கூறி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு பதில் மாற்று வீரர் ஒருவரை தேர்வு செய்வது தொடர்பிலும் லக்னோ அணி அவதானம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதில் போட்டியில் பங்கேற்பதற்கு தயாராக இருக்கும் குழாத்தில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் வீரர்களான முஜீபுர் ரஹ்மான், முஹமது நபி, இங்கிலாந்து வீரர்களான லியாம் டோசன் மற்றும் ரெஹான் அஹமது ஆகிய வீரர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
லக்னோ அணி இம்முறை தொடரின் முதல் போட்டியில் தோல்வியுற்றபோதும் சன்ரைசஸ் ஹைத்ராபாத் அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் போராடி வெற்றியீட்டியது.
எனினும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் இந்திய நாணயப்படி 18 கோடி ரூபாவுக்கு வாங்கப்பட்ட மதீஷ பத்திரண அந்த அணிக்கு திரும்புவது குறித்து அணி நிர்வாகம் நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.




