இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணிக்கு மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் ஷிம்ரொன் ஹெட்மெயர் அழைக்கப்பட்டிருப்பதோடு வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் உபாதையில் இருந்து மீண்டு அணிக்குத் திரும்பியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (03) கிங்ஸ்டனில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கு ஷாய் ஹோப் தலைமையிலான 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மேற்கிந்திய தீவுகள் கடைசியாக ஆடிய பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் இடம்பெற தவறிய ஹெட்மெயர் அழைக்கப்பட்டுள்ளார். அவர் கடைசியாக கடந்த ஆண்டு ஜுனில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலேயே ஆடியிருந்தார்.
இதேநேரம் கடந்த ஆண்டு அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது உபாதைக்கு உள்ளான ஜோசப் அதன் பின்னர் முதல் சர்வதேச போட்டியில் ஆடவே அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெற தவறிய மற்றொரு வீரரான இடது கை சுழல் வீரர் குடகேஷ் மோட்டியும் இலங்கைக்கு எதிரான தொடருக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகள் அணி கடைசியாக ஆடிய ஆறு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஐந்தில் தோற்றதோடு பங்களாதேஷுக்கு எதிரான சுப்பர் ஓவரிலேயே ஒரு வெற்றியையும் பெற்றது. எனினும் அந்த அணி 2023 தொடக்கம் சொந்த மண்ணில் கடைசியாக ஆடிய நான்கு தொடர்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகள் குழாம்: ஷாய் ஹோப் (தலைவர், விக்கெட் காப்பாளர்), அகீம் அகஸ்டே, ஜோன் கெம்பல், கீசி கார்டி, ரொஸ்டன் சேஸ், மத்தியூ போர்ட், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷிம்ரோன் ஹெட்மயர், அமிர் ஜங்கு, அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், குடகேஷ் மோட்டி, ஷர்பான் ரதபோர்ட், ஜெய்டன் சீல்ஸ், ஷமர் ஸ்பிரிங்கர்.



