இலங்கையில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் ஆப்கான் ஏ அணிகளுக்கு எதிரான முக்கோண ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணியில் ரியான் பராக்கிற்கு பதில் ருதுராஜ் காய்குவாட் அழைக்கப்பட்டுள்ளார். பராக் உபாதைக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி பராக்கின் உப தலைமை பதவியையும் காய்குவாட் வகிக்கவுள்ளார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் ஆடிய பராக் காயத்துடனேயே இறுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்றிருந்தார். ராஜஸ்தான் அணி பிளே ஓஃப் சுற்றுக்கு முன்னேறியபோதும் குஜராத் டைட்டன்ஸ் இடம் தோற்று வெளியேறியது.
மறுபுரம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக காய்குவாட்டுக்கு இம்முறை ஐபிஎல் கடுமையாக இருந்தது. இம்முறை தொடரில் சென்னை எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. அவர் துடுப்பாட்டத்திலும் 14 போட்டிகளில் 337 ஓட்டங்களுடன் பெரிதாக சோபிக்கத் தவறினார். எனினும் அவர் 50 ஓவர் போட்டிகளில் அண்மைக் காலத்தில் சோபித்து வரும் நிலையிலேயே அணிக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.
இந்த முக்கோண தொடருக்கான இந்திய ஏ அணியின் தலைவராக திலக் வர்மா செயற்படவுள்ளார். இந்தத் தொடரில் இந்திய ஏ தனது முதல் போட்டியில் எதிர்வரும் 9 ஆம் திகதி தம்புள்ளையில் இலங்கை ஏ அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்திய ஏ குழாம்: திலக் வர்மா (தலைவர்), ருதுராஜ் காய்குவாட் (உப தலைவர்), பிரியன்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்சி, ஆயுஷ் பதோனி, நிஷான்ட் சின்து, சூர்யன்ஷ் ஷெட்ஜ், பிரப்சிம்ரா சிங் (வி.கா.), விப்ராஜ் நிகாம், யாஷ் தகூர், யுத்விர் சிங், அன்ஷுன் அம்போஜ், அர்ஷாத் கான், அனுகுல் ரோய்.



