குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி நிதியுதவி

2 Min Read

குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், மாதாந்த கல்வி நிதியுதவி வழங்குவது குறித்து ஜனாதிபதி நிதியம் கவனம் செலுத்தியுள்ளது.

நேற்று (20) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே மற்றும் தேசிய லொத்தர் சபை, அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் தற்போது பல்வேறு துறைகளை உள்ளடக்கிய வகையில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருவதுடன், பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்காக பல்வேறு நிதியுதவித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் மற்றுமொரு கட்டமாக, குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி நிதியுதவி வழங்க ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபையின் அனுமதி கிடைத்துள்ளது.

ஜனாதிபதி நிதியத்திற்கு நிதியளிப்பதில் லொத்தர் சபைகள் பாரிய பங்களிப்பை வழங்குகின்றன. எனினும், லொத்தர் சபைகளுக்கு அந்த வருமானத்தை ஈட்டித் தருவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் லொத்தர் விற்பனையாளர்களின் வாழ்க்கைத்தரம் எப்போதும் மாறாமல் இருப்பது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அவர்களது சேவையைப் பாராட்டுவதற்கும், வாழ்க்கைச் சுமைக்கு கைகொடுப்பதற்கும் ஜனாதிபதி நிதியம் கவனம் செலுத்தியுள்ளது.

அதன்படி, குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியம் கல்வி நிதியுதவி வழங்குவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அதற்காகத் தங்களது பங்களிப்பை வழங்குவதற்கு தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியவற்றின் அதிகாரிகள் தமது விருப்பத்தை தெரிவித்தனர். பிரதேச செயலகங்கள் ஊடாக இந்த கல்வி நிதியுதவித் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

தேசிய லொத்தர் சபையின் தலைவர் எம். டி. சி. எண்டன் பெரேரா, தேசிய லொத்தர் சபையின் பொது முகாமையாளர் ஏ. எம். அரீப், அபிவிருத்தி லொத்தர் சபையின் பொது முகாமையாளர் டபிள்யூ. கே. ஏ. ஏ. ஜயரத்ன ஆகியோருடன் அதிகாரிகள் பலர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *