வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தற்போது பெலாறூஸ் குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், மின்ஸ்க் நகரில் பெலாரஸ் வெளிவிவகார அமைச்சர் மாக்சிம் ரிஜென்கோவ் மற்றும் அந்நாட்டு மூத்த அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இந்த கலந்துரையாடல்களில் இலங்கையின் சார்பில், ரஷ்ய சம்மேளனத்திற்கான இலங்கையின் நியமனத் தூதுவர் ஷோபினி குணசேகர, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான பணிப்பாளர் நாயகம் சுகீஷ்வர குணரத்ன மற்றும் பிற அரச அதிகாரிகள் பங்கேற்றனர்.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னர், இலங்கை மற்றும் பெலாறூஸ் வெளிவிவகார அமைச்சர்கள் இணைந்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். அதில், பல்வேறு துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான இரு நாடுகளின் பரஸ்பர உறுதிப்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு தசாப்தத்திற்கும் மேலான கால இடைவெளிக்குப் பிறகு, இலங்கையிலிருந்து பெலாரஸிற்கு மேற்கொள்ளப்பட்ட முதல் உயர்மட்ட விஜயமாக இந்தப் பயணம் அமைந்துள்ளது. இது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளில் புதிய முன்னேற்றத்தையும் புத்துணர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன. இவை எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கை மற்றும் பெலாரஸ் இடையிலான இருதரப்பு உறவுகளையும் ஒத்துழைப்பையும் மேலும் விரிவுபடுத்துவதற்கான வலுவான அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



