குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் ரூ . 98 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருபோதும் நிறுவப்படாத “பயனர் மேலாண்மை தொகுதி” (User Management Module) மென்பொருளுக்காக மேற்கொள்ளப்பட்ட ரூ. 9,831,250 பணப்பரிமாற்றம் குறித்த விசாரணைகளை அடுத்தே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த மென்பொருள் அமைப்பை வழங்காமல், அரசாங்க நிதி மோசடியாகப் பெறப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சந்தேகநபர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளைத் தொடரும் அதேவேளையில், சந்தேகநபர் கடுவல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



