சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிக உர மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
மேற்படி உரமானியம் வழங்குவதற்கான நிதி, திறைசேரியினால் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில தரப்பினர் விமர்சித்து வருவது போன்று நாட்டில் உரத் தட்டுப்பாடு எதுவும் கிடையாது என்பதை உறுதியாகத் தெரிவித்த அமைச்சர் எனினும் வருங்காலத்தில் உரத்திற்கான விலைகளில் அதிகரிப்பு ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர் ,
தற்போதைய மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலையால் கப்பல் கட்டணங்கள் மற்றும் காப்புறுதி கட்டணங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக தற்போது
உரத்தின் விலைகள் உயர்ந்து நாம் இறக்குமதி செய்யும் உரத்தின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் உர விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும், அந்த வகையில் உர விலை அதிகரிப்பால் விவசாயிகளுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்கும் வகையில் நெல் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டெயாருக்கு 5,000 ரூபா மானியத்தை அரசாங்கம் வழங்கி வருகிறது. இது 2 ஹெக்டேயர் வரை வழங்கப்படும் என்பதுடன் விவசாயிகளுக்கு 10,000 ரூபா கிடைக்கும்.
அதற்கிணங்க சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கும் 5,000 ரூபா மேலதிக மானியம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் விலை அதிகரிப்பு ஏற்படும் போது விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய இழப்பைக் குறைக்க அரசாங்கம் இவ்வாறு மானியத்தை அதிகரித்து வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்



