துருக்கியில் இருந்து பயணித்த விமானம் நேபாளத்தில் தரையிறங்கிய போது விமானத்தின் டயரில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
துருக்கியின் ஸ்தான்புல் நகரில் இருந்து நேபாளத்துக்கு வந்த துருக்கி ஏர்லைன் விமானமான டிகே 726 காத்மாண்டு விமான நிலையத்தில் நேற்று காலை 6.45 மணிக்கு தரையிறங்கியபோது திடீரென விமானத்தின் டயரில் தீ ஏற்பட்டது. இந்த விமானத்தில் 277 பயணிகள், விமானிகள், 11 ஊழியர்கள் அடங்கலாக 288 பேர் பயணித்தனர்.
விமானத்தின் டயரில் தீ ஏற்பட்டதையடுத்து உடனடியாக விமானத்தில் இருந்த அனைவரும் அவசரமாக தரையிறக்கப்பட்டனர். விமானத்தில் அவசரக் கதவுகள் வழியாக பயணிகள் மீட்கப்பட்டனர். இச்சயம் இலேசான காயங்களுக்கு உள்ளான சிலர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். அவசரகால நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடு சபையின் பல்வேறு முக்கிய பிரதிநிதிகள் இதில் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. விமான நிறுவனத்தின் தகவல் தொடர்புப் பிரிவின் சிரேஷ்ட பிரதித் தலைவர் யஹ்யா உஸ்துன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, ‘எங்கள் குழுக்களால் விமானத்தின் தொழில்நுட்ப ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. ஹைட்ரொலிக் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே புகைக்குக் காரணம் என ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன’ என்று பதிவிட்டுள்ளார்.



