சிரியாவுடன் முழுமையான வர்த்தக உறவுகளை மீண்டும் ஆரம்பிக்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளது.
சிரியாவுடன் மீண்டும் உறவை ஏற்படுத்துவதற்கும் அதன் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுள்ள உறுதிப்பாட்டின் தெளிவான அரசியல் சமிக்ஞை இந்நடவடிக்கையின் ஊடாக வழங்கப்படுவதாக ஐரோப்பிய கவுன்சில் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 14 ஆண்டுகால போரிலிருந்து சிரியா மீண்டு வர முயன்று வரும் நிலையில், அந்நாட்டுடனான ஒத்துழைப்பு ஒப்பந்த இடைநிறுத்தத்தை ஐரோப்பிய கவுன்சில் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் அந்நாட்டுடன் முழுமையான வர்த்தக உறவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் சிரியாவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக இந்நடவடிக்கை அமையும் என்று கவுன்சில் நேற்று முன்தினம் சுட்டிக்காட்டியுள்ளது. சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் பதவி கவிழ்க்கப்பட்டு 18 மாதங்கள் கடந்துள்ள சூழலில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸில் சிரியாவின் உயர்மட்ட தூதர் அசாத் அல்-ஷைபானியைச் சந்தித்து, உயர்மட்ட அரசியல் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



