வாகனங்கள் வேகமாக கடக்கும் போதே சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளில் 100% Fastag
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில், சுங்கச்சாவடி மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதில், ரொக்கப்பரிவர்த்தனையில் நேர விரயம் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, Fastag முறை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் அமுல்படுத்தப்பட்டு காத்திருக்கும் நேரம் 3 நிமிடங்களில் இருந்து 60 வினாடிகளாக குறைக்கப்பட்டது.
இன்று முதல் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ரொக்க பரிமாற்றத்தை நிறுத்தியுள்ள அரசு, 100% Fastag முறை நடைமுறைப் படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.
வாகனங்களை நிறுத்தாமலே சுங்கக்கட்டணம்
அதேவேளையில், வாகனங்களை சிறிது நேரம் கூட நிறுத்தாமல், வேகமாக கடக்கும் போதே கட்டணம் வசூலிக்கும் முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதில், AI மற்றும் அதிவேக கேமராக்கள் உதவியுடன் வாகனம் அடையாளம் காணப்படும். தானியங்கி வாகனப் பதிவு எண் கண்டறிதல் (ANPR) தொழில்நுட்பத்தை, RFID அடிப்படையிலான FASTag தொழில்நுட்பத்துடன் இணைத்து, வாகன அடையாளத்தின் அடிப்படையில் சுங்கக் கட்டணங்கள் தானாகவே கழிக்கப்படும்.
இந்தியாவில் முதல்முறையாக குஜராத்தின் சூரத் நகரில் உள்ள சோரியாசியில் உள்ள சுங்கச்சாவடியில் இந்த முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை-டெல்லி நெடுஞ்சாலையில் (NH48), சூரத் மற்றும் பரூச் நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. பிப்ரவரி முதல் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்த நிலையில், தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் உள்ள 1,050 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளை, செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறைக்கு மாற்ற உள்ளதாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.



