மலேசியாவின் சபா மாகாணத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 200 வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளதோடு நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். இச்சம்பவத்தில் 445 பேர் இடம்பெயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களின் பாதுகாப்பு மற்றும் உடனடி நிவாரணப் பணிகளை முன்னெடுக்கவும் பிரதமர் அன்வர் இப்றாஹிம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

சபா மாகாணத்தில் உள்ள கடலோரக் கிராமத்தில் ஏற்பட்ட இத்தீவிபத்தில் சுமார் 200 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதோடு நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மாநில செய்தி நிறுவனமான பெர்னாமா தெரிவித்துள்ளது.இது குறித்து மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படைத் தலைவர் ஜிம்மி லாகுங் கூறுகையில், பலத்த காற்று மற்றும் வீடுகள் மிக நெருக்கமாக இருந்ததே தீ மிக வேகமாகப் பரவக் காரணமாக அமைந்தது. மேலும், கடல் நீர் மட்டம் குறைவாக இருந்ததால் தீயை அணைக்கத் தேவையான தண்ணீரைப் பெறுவதிலும் சிரமம் ஏற்பட்டது என்றார். இக்கிராமங்களில் வீடுகள் மரத்தினால் செய்யப்பட்டு, தூண்களின் மேல் கட்டப்பட்டிருக்கின்றன. இங்கு நாட்டின் மிகவும் ஏழ்மையான சமூகத்தினர், நாடற்றவர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.



