பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் லன்ச் ஷீட் பாவனைக்கு தடை

1 Min Read

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை கல்வி வலயத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் இயங்குகின்ற சிற்றுண்டிச்சாலைகளில் லன்ச் ஷீட் (Lunch Sheet) பாவனையை முற்றாக தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஆசியாவின் இளம் சூழலியல் விழிப்புணர்வாளர் சர்வதேச விருது பெற்ற மின்மினி மின்ஹா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சம்மாந்துறை வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமாருக்கு கடந்த வெள்ளிக்கிழமை கையளித்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “நாவிதன்வெளி, இறக்காமம், சம்மாந்துறை கல்விக் கோட்டங்களிலுள்ள பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகளில் லன்ச் ஷீட் பாவனையை உடனடியாக தடை செய்து, அதற்கான விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட வேண்டும். மேலும் இதனை மீறிச் செயற்படும் சிற்றுண்டிச்சாலை நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

லன்ச் ஷீட் பாவனையானது மனித உடல்நலத்துக்கு தீங்கு விளைவிப்பதுடன், புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. மாணவர் சமூகத்தின் நலனை கருத்திற்கொண்டு இந்நடவடிக்கையை முன்னெடுப்பது அவசியமானது. இதனை இந்த (2026) ஆண்டின் ஜூன் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தி, அதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் பொதுமக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும். லன்ச் ஷீட் பாவனைக்கு பதிலாக வாழை இலை, தேக்கு இலை போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்தவைகளை பாவிக்க வேண்டும்.

பாடசாலை விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்வுகள் போன்றவற்றின் போதும் லன்ச் ஷீட் பாவனையை தடை செய்து ஆரோக்கியமான, பாதுகாப்பான சூழலை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

மேலும் உணவுப் பாத்திரங்களை சுடுநீரில் சுத்தம் செய்து சுகாதாரமான முறையில் உணவுகள் வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *