உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!

Karan
By
Karan
1 Min Read

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் காரணமாக உலகளவில் உணவுப் பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடும் என உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் இந்தர்மித் கில் (Indermit Gill) எச்சரித்துள்ளார்.

வொஷிங்டனில் நடைபெற்று வரும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்தகால கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக வழங்கிய நேர்காணலில் அவர் பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.

ஏற்கனவே உலகில் சுமார் 300 மில்லியன் மக்கள் கடும் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய மோதல்களின் விளைவாக இந்த எண்ணிக்கை மிக விரைவில் 20 சதவீதத்தால் அதிகரிக்கக்கூடும்.

எண்ணெய் விநியோகப் பாதையான ‘ஹோர்முஸ்’ நீரிணை (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளதால், உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது விவசாய உற்பத்தியைப் பாதிப்பதுடன், நாடுகள் தமது உணவு ஏற்றுமதியைத் தடை செய்யவும், உணவுகளைப் சேமித்து வைக்கவும் தூண்டும். இதனால் உணவுப் பொருட்கள் சந்தையில் அரிதாகி விலை மேலும் உயரும்.

உலகளாவிய பணவீக்கம் 3 சதவீதத்திலிருந்து 4.7 சதவீதம் வரை உயரக்கூடும். அதேவேளை, உலகப் பொருளாதார வளர்ச்சி 40 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுகிறது.

தற்போது இந்த நெருக்கடி ஆசிய நாடுகளிலேயே அதிகம் உணரப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், போர் நீடிக்கும் பட்சத்தில் இது மிக வேகமாக ஆபிரிக்க நாடுகளுக்கும் பரவும் எனத் தெரிவித்தார்.

குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் கடன் நெருக்கடியிலும், பணவீக்கத்திலும் சிக்கிப் பெரும் பாதிப்புகளைச் சந்திக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதல் நிலைமை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை நீடிக்குமானால், ஏழை நாடுகளில் பட்டினிச் சாவு பாரிய அளவில் ஏற்படக்கூடும் என்றும், தற்போதைய சூழலில் ஒவ்வொரு நாளும் இந்த அபாயகரமான நிலையை நோக்கியே உலகம் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் இந்தர்மித் கில் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *