அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவர் ஒருவர் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன இந்திய மாணவர்
இந்தியாவைச் சேர்ந்த சாகேத் ஸ்ரீனிவாசையா என்ற 22 வயது மாணவர், அமெரிக்காவில் கடந்த 9ஆம் திகதி காணாமல் போனார்.

கலிபோர்னியாவில் உள்ள டில்டன் பிராந்திய பூங்காவில் உள்ள ஒரு ஏரிக்கு அருகில் சாகேத் கடைசியாக காணப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் பூங்கா பகுதியிலும், அதைச் சுற்றியும் மாணவரைக் கண்டுபிடிக்க தேடுதல் பணியை தொடங்கியுள்ளனர்.
உறுதிப்படுத்திய தூதரகம்
மாணவரின் தந்தை, கடைசியாக பிப்ரவரி 9ஆம் திகதி தன் மகனிடம் பேசியதாகவும், அதன் பின்னர் குடும்பத்தினர் தகவல்களை சேகரிக்க முயற்சித்து வருவதாகவும் கூறினார்.
இந்த நிலையில், பொறியியல் பட்டதாரியான மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசையா இறந்து கிடந்ததை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான ஒரு அறிக்கையில், “உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் உடலை விரைவில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் உட்பட குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தூதரகம் தயாராக உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.





