ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் மகன் பிரித்தானியாவில் 100 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான மதிப்புள்ள ஆடம்பர மாளிகைகளுக்கு உரிமையாக உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் சொத்துக்கள்
ஈரானின் உயர் தலைவரான அலி காமெனியின் மகனான 56 வயது மொஜ்தபா காமெனி என்பவருக்கு வடக்கு லண்டனின் ஹாம்ப்ஸ்டெட் பகுதியில் 11 மாளிகைகள் சொந்தமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அலி காமெனியின் இரண்டாவது மகனான இவர், சில பினாமி நிறுவனங்களின் சார்பில் லண்டனில் சொத்துக்களை வாங்கியுள்ளார். ஆனால், வங்கியாளரான அலி அன்சாரி இந்த சொத்துக்களுக்கு ஆதாயம் பெறும் உரிமையாளராக உள்ளார்.
ஈரானின் அரசியல் செல்வாக்கு கொண்ட இந்த அன்சாரி, அலி காமெனி குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர். கடந்த அக்டோபர் மாதம் அன்சாரி மீதும் பிரித்தானியா பொருளாதாரத்தடைகள் விதித்திருந்தது.
காமெனிக்கும் தொடர்பு
ஈரானின் IRGC இராணுவ அமைப்புக்கு நிதியுதவி செய்ததாக அன்சாரி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அன்சாரி Ayandeh வங்கியை நடத்தி வந்துள்ளார். கடந்த ஆண்டு இந்த வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், செய்தி ஊடகமான Bloomberg வெளியிட்டுள்ள தகவலில், லண்டன் சொத்துக்களுக்கும் காமெனிக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதற்கான ஆவணங்களை Bloomberg பார்வையிட்டு உறுதி செய்துள்ளதாகவும், அன்சாரி ஊடாக உலகின் பல நாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவிக்கவும் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

லண்டனில் உள்ள சொத்துக்கள் கடந்த 2013ல் 73 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கப்பட்டதாகவும், அதன் மதிப்பு தற்போது 100 மில்லியன் பவுண்டுகள் எனவும் கூறுகின்றனர்.




