இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தன் குழந்தையுடன் தன் தாய் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவருக்கு மயக்க மருந்து கலந்த லட்டு கொடுத்து நபர் ஒருவர் அவரது குழந்தையைக் கடத்திச் சென்றுவிட்டதாக பொலிசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
தாய்க்கு லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்
வியாழக்கிழமையன்று, உத்தரப்பிரதேசத்திலுள்ள அலிஹார் என்னுமிடத்திலிருந்து தன் 10 மாதக் குழந்தையுடன் தன் தாய் வீடான ஜார்க்கண்டுக்கு புறப்பட்டுள்ளார் முன்னி பேகம் என்னும் பெண்.
ரயிலில் பேகத்துடன் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் அவருக்கு லட்டு ஒன்றைக் கொடுத்துள்ளார். இது தன் தாய் தன் கைப்பட செய்தது என்று கூறிய அந்த நபர், பேகத்துக்கு உதவியாக அவரது குழந்தையையும் தன் கையில் வாங்கிவைத்துக்கொண்டுள்ளார்.
சிறிது நேரத்தில் சுயநினைவிழந்துவிட்ட பேகம், பின்னர் நினைவு திரும்பும்போது அந்த நபரையும் அவரிடமிருந்த தன் குழந்தையையும் காணவில்லை என்பதை புரிந்துகொண்டுள்ளார்.

அந்த நபர் தனக்கு மயக்க மருந்து கலந்த லட்டு ஒன்றைக் கொடுத்து தன் குழந்தையைக் கடத்திச் சென்றுவிட்டதாக பேகம் பொலிசாரிடம் புகாரளித்துள்ளார்.
CCTV கமெராக்களை ஆய்வு செய்த பொலிசார், மதியம் 3.40 மணியளவில், அந்த நபர் கையில் குழந்தையுடன் ஃபத்தேபூர் ரயில் நிலையத்தில், ரயிலிலிருந்து இறங்குவதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
அதன் அடிப்படையில் பொலிசார் அந்த நபரைத் தேடி வருகிறார்கள்.




