நவீன உலகில் வேலை மற்றும் பல்வேறு காரணங்களால் மனிதர்கள் தனியாக வசித்து வரும் சூழல் அதிகரித்து வருகிறது.
இளைய தலைமுறையினர் பலரும் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாவதால், தனிமை அதிகரித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், ஸ்மார்ட்போன் மூலமே அதற்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது.
நீங்கள் இறந்து விட்டீர்களா? செயலி
சீனாவை சேர்ந்த 30 வயதுடைய 3 இளைஞர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஈ-லே-மா( Sileme) (ஆங்கிலத்தில் are you dead?) என்ற செயலியை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

இந்த செயலி சமீபத்தில் ட்ரெண்ட் ஆன நிலையில், ஜனவரி 10 ஆம் திகதி முதல் சீனாவின் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முதலிடம் பிடித்துள்ளது.

தனிமையில் இருப்பவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த செயலியில், பயனர்கள் தங்களுக்கு நெருக்கமான ஒருவரின் மின்னஞ்சல் முகவரியை அவசரத் தொடர்புக்கு பதிய வேண்டும்.
அதன் பின்னர், பயனர்கள் 2 நாட்களுக்கு ஒரு முறை இந்த செயலியின் உள்ளே நுழைந்து, அதில் உள்ள பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்யவில்லை என்றால், அந்த செயலி அதுவாகவே நெருக்கமானவரின் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பி விடும்.
வைரலாக காரணம் என்ன?
2024 ஆம் ஆண்டில் சீனாவில் 12.3 கோடி பேர் தனிமையில் வசித்து வந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5.2 சதவீதம் அதிகமாகும். அவர்களில் 11 கோடி பேர் 20 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள்.

தனிமையில் இருப்பவர்கள் திடீர் உடல்நலக் குறைவு அல்லது விபத்துக்களால் உயிரிழக்கும் போது, அது பல நாட்களுக்குப் பிறகே வெளியுலகிற்குத் தெரிய வரும் சோகமான நிகழ்வுகள் அங்கு அதிகரித்து வருகின்றன.
இப்படியான தனிமை மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த செயலி சீனாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இந்த செயலி, உரிய நேரத்தில் மருத்துவ உதவியோ அல்லது மீட்பு நடவடிக்கையோ கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
முதலில் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் செயலி, தற்போது 8 யுவான் (1.15 டொலர்) கட்டணத்தில் கிடைக்கிறது.
இந்த செயலியை உருவாக்க ஒரு மாத காலமும், 1000 யுவானும்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.13,000) தேவைப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த செயலியில் இப்போது IOS பதிப்பு மட்டுமே உள்ள நிலையில், செயலி வைரலான பின்னர் 200 மடங்கு டவுன்லோட் அதிகரித்துள்ளதாக செயலியை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.




