டிட்வா புயல் மறுசீரமைப்புக்காக, இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் உதவித் தொகுப்பை இந்தியா அறிவித்துள்ளது.
டிட்வா புயல்
கடந்த நவம்பர் மாத இறுதியில் வங்கக்கடலில் உருவான டிட்வா புயல்(Cyclone Ditwah), இலங்கையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.
கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 600க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் வீடுகளை இழந்தனர்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க, இலங்கை அரசுக்கு இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உதவி வழங்கின.

இந்திய அரசு ஆபரேஷன் சாகர் பந்து என்ற பெயரில், அத்தியாவசிய உணவு, மருந்து உட்பட 1,100 டன் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. மேலும், மீட்புப் பணிக்கான உபகரணங்களுடன் 80 NDRF வீரர்கள் அடங்கிய குழு விமானப்படை விமானத்தில் இலங்கை சென்றது.
450 மில்லியன் டொலர் நிதி உதவி
இந்நிலையில், இந்திய பிரதமர் மோடியின் சிறப்புத் தூதராக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றுள்ளார்.

கொழும்புவில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், “மீள்கட்டமைப்பின் அவசரத்தை உணர்ந்த பிரதமர் மோடி, முன்னுரிமைகளை நிவர்த்தி செய்ய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுமாறு உத்தரவிட்டுள்ளார்.
நாங்கள் முன்மொழிந்த உதவித் தொகுப்பு, 350 மில்லியன் டொலர் சலுகை கடன்தொகை மற்றும் 100 மில்லியன் டொலர் மானியங்கள் உட்பட 450 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,000 கோடி) மதிப்புடையது.
இந்தத் தொகுப்பு இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான ஆலோசனைகளின் பின்னர் இறுதி செய்யப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.




