“செங்கல்பட்டு நீதிமன்றில் கணவனைத் தேடும் மனைவியின் கதை தமிழ்நாட்டுக்கே தெரியும். நடிகர் என்பதை மறந்து, இனியாவது முதல்வராக விஜய் நடந்து கொள்ள வேண்டும்.” என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் எழுதப்பட்ட அவதூறுகளை அள்ளிவீசி நடித்துக் காட்டி இருக்கிறார் முதல்வர். பேரவையின் லைவ் கேமராவை, சினிமா கேமரா என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி ஒரே தடவையில் பதிவு செய்ய வேண்டும் என்று பேரவைத் தலைவர் கஷ்டப்பட்டது ஏற்புடையது அல்ல. முதல்வரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் – பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்தனவே தவிர, மின்வெட்டு, விவசாயிகள் பிரச்சினை, மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்தப் பதிலும் இல்லை. எதிர்க்கட்சிகளின் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது. குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு நீதிமன்றில் கணவனை தேடும் மனைவியின் கதை தமிழ்நாட்டுக்கே தெரியும். ஆகவே, அவர் நடிகர் விஜய் என்பதை மறந்து, இனியாவது முதல்வர் விஜய்யாக அவர் நடந்து கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சடடப்பேரவையில் முதல்வர் விஜய், அப்பாவைத் தேடும் மகன் என்று ஒரு குட்டிக் கதையைக் கூறியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் உதயநிதி கருத்து தெரிவித்துள்ளார்.




