கடந்த மாதம் மூன்று ஆண்டுகளில் இல்லாத வேகத்தில் அமெரிக்காவில் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளமை தொடர்பான அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் வெளியானதைத் தொடர்ந்து, ‘நான் பணவீக்கத்தை விரும்புகிறேன்’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தொழிலாளர் புள்ளிவிபரப் பணியகத்தின் மே மாத புள்ளிவிபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், கடந்த 12 மாதங்களில் விலைகள் 4.2 சதவீதம் உயர்ந்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்தில் 3.8 சதவீதமாக இருந்த இந்த உயர்வு வீதம், ஈரானில் அமெரிக்க–- இஸ்ரேல் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிசக்தி செலவு அதிகரிப்பால் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் வௌ்ளை மாளிகையில் கருத்து தெரிவித்த ட்ரம்ப் மேலும் கூறுகையில், ‘நான் இதை விரும்புகிறேன். புள்ளிவிபரங்கள் சிறப்பாக இருந்தன. நான் உண்மையிலேயே பணவீக்கத்தை விரும்புகிறேன், ஈரானுடனான போர் முடிந்தவுடன் உயரும் விலைகள் கடுமையாகக் குறையும். இந்த மோதல் முடிந்ததும் குறிப்பாக எண்ணெய் விலையும் முன்பு இருந்த நிலைக்குக் குறைவதை நீங்கள் காண்பீர்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானில் அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தும் போரின் அழுத்தத்தை குடும்பங்கள் அதிகளவில் உணர்வதால், அமெரிக்க நுகர்வோர் விலை சுட்டி தொடர்ந்து மூன்றாவது மாதமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



