ஒவ்வொரு மனிதரையும் மதிக்குமாறும் வாக்காளர்களைப் பிரிப்பதை நிறுத்துமாறும் உலகத் தலைவர்களை பரிசுத்த பாப்பரசர் 14 ஆம் லியோ வலியுறுத்தியுள்ளார்.
இத்தாலிக்கு வெளியே ஐரோப்பிய நாடொன்றுக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஸ்பெயினுக்கு ஒரு வார காலப் பயணம் மேற்கொண்டுள்ள பரிசுத்த பாப்பரசர் 14 ஆம் லியோ மாட்ரிட் நகரில் நிறைவேற்றிய திருப்பலி பூசையில் 12 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்குபற்றியுள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்காக பாப்பரசர் லியோ தனது வெள்ளை நிற வாகனத்தில் பயணித்து அந்நாட்டின் புகழ்பெற்ற பிளாசா டி சிபெல்ஸ் சதுக்கத்திற்குள் பிரவேசித்த போது மக்கள் கூட்டம் பேராவலுடன் முண்டியடித்தபடி, கொடிகளை அசைத்து, போப் வாழ்க என்று முழக்கமிட்டனர். அந்த சதுக்கத்திற்குள் அவர் பிரவேசித்த போது மலர்கள் தூவி அவர் வரவேற்கப்பட்டார். அந்த சதுக்கத்திலும் அதைச் சுற்றியுள்ள வீதிகளிலும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்ததாக வத்திக்கான் தெரிவித்தது.புலம்பெயர்ந்தோர் மற்றும் வீடற்றோருடன் சந்திப்புகளை மேற்கொண்ட அவர், மட்ரிட்டில் சுமார் 600,000 இளைஞர்களுடனான ஒரு விழிப்புப் பேரணியிலும் பங்கேற்றார். ஸ்பெய்னுக்கான இந்த விஜயத்தில், பார்சிலோனா மற்றும் கேனரி தீவுகளுக்கும் அவர் செல்லவுள்ளார். அங்கு, மேற்கு ஆபிரிக்காவிலிருந்து எல்லை கடந்து வந்துள்ள மக்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.



