இரத்தினபுரி மாவட்டத்தின் தேயிலைக் கைத்தொழிலை மேம்படுதுவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (04) இரத்தினபுரி மாவட்ட தேயிலைச் சபையில் நடைபெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன ஆகியோர் இக்கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கினர்.
இதன்போது இரத்தினபுரி மாவட்டத்தின் தேயிலைக் கைத்தொழில் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், தேயிலைத் தொழிற்சாலைகளின் நிலை, உர மானியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் மற்றும் சந்தைக்கு வரும் உரங்களின் தரம் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இது ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் என்ற அடிப்படையில், எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வுகளை முன்வைப்பதற்காக இம்மாதத்திற்குள் இரண்டாம் கட்ட கலந்துரையாடலை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன தேயிலை விவசாயிகள் எதிர்கொள்ளும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான விசேட அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கினார்.
தேயிலைக் கைத்தொழிலை மேலும் உயர்துவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் முன்மொழிந்தார். அம்முன்மொழிவுகளை உடனடியாக நடைமுறைப்படுதி, இரத்தினபுரி மாவட்ட தேயிலையின் தரத்தையும் உற்பத்தியையும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இக்கலந்துரையாடலில் தேயிலைச் சபை அதிகாரிகள், தோட்ட உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.



