மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்புக்கணை முதல் கலகெதர வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இந்த பணிகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் பகுதியின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 18.7 கிலோமீற்றர் தூரத்திற்கு இந்த நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன் முதற்கட்டத்தின் கீழ் பொத்துஹெர முதல் ரம்புக்கணை வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அந்தப் பணிகள் அடுத்த வருட நடுப்பகுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்டப் பணிகளுக்காக ரூ. 78 பில்லியன் செலவிடப்படுவதுடன், இரண்டாம் கட்டத்தின் கீழ் ரம்புக்கணை முதல் கலகெதர வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகளுக்காக ரூ. 112.4 பில்லியன் செலவிடப்படவுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான முழுமையான நிதி உள்நாட்டு நிதியுதவிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளதுடன், இதன் நிர்மாணப் பணிகள் உள்நாட்டு ஒப்பந்த நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



