வறுமையை ஒழித்து, இலங்கை மக்களை வலுவூட்டுவதற்காக புதிய அணுகுமுறை

1 Min Read

சமூகத்தை வலுவூட்டுவதற்கும், பொருளாதார நன்மைகள் சமூகத்தில் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளுக்கான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான செயலமர்வு கடந்த 23ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

“சமூக சக்தி” வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய வறுமையை ஒழித்து, சமூகத்தை வலுவூட்டுவதற்காக இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீளாய்வு செய்வது குறித்தும், 2027ஆம் ஆண்டிற்கான முன்மொழிவுகளைக் கண்டறிவதற்கான ஒரு கட்டமைப்பைத் தயாரிப்பது குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

சமூக சக்தி தேசிய செயற்பாடின் முதன்மை நோக்கம் சமூகத்தை வறுமையிலிருந்து மீட்பதாகும் என்றும், அதற்காக ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இங்கு தெரிவித்தார்.

அதற்காக அனைத்து அமைச்சுகள், திணைக்களங்கள், அரச நிறுவனங்கள் மட்டுமன்றி, அனைத்து அபிவிருத்தி தரப்பினரும் ஒரே அபிவிருத்தி தளத்தில் இருந்து செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார். அத்துடன், நாட்டின் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில், உலகின் வளர்ந்த நாடுகள் பின்பற்றியுள்ள மூலோபாய வேலைத்திட்டங்கள் மற்றும் முறைகளை ஆராய்வதும், தற்போதைய நிலைமைகளைத் தொடர்ச்சியாக மீளாய்வு செய்து சமூக சக்தி வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னோக்கி கொண்டு செல்வதன் அவசியத்தையும் ஜனாதிபதியின் செயலாளர் இங்கு வலியுறுத்தினார். ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க ஆகியோருடன் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சுக்குரிய நிறுவனங்களின் அதிகாரிகள், சமூக சக்தி செயலகத்தின் அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *