இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் மாத பிற்பகுதியில் நடத்த ஏற்பாடாகியுள்ளது. இந்தத் தொடருக்கான போட்டி அட்டவணை இன்னும் உறுதி செய்யப்படாதபோதும் போட்டியை நடத்துவதற்கான இரண்டு வார காலப் பகுதியை இலங்கை கிரிக்கெட் சபை தேர்வு செய்திருப்பதாக ‘கிரிக்பஸ்’ செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சம்பியன்சிப் பருவத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் இத் தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் 15 மற்றும் 27 காலப்பகுதிக்கு இடையே நடத்த ஏற்பாடாகியுள்ளது. எனினும் இந்த டெஸ்ட் தொடருடன் சேர்த்து நடத்த திட்டமிடப்படும் மூன்று டி20 சர்வதேச போட்டிகள் தொடர்பான விபரம் உறுதி செய்யப்படவில்லை.
இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் 9 ஆம் திகதி முடிவுற்ற பின்னர் நடத்துவதற்கே ஏற்பாடாகியுள்ளது. இலங்கைக்கான இந்தியாவின் இந்த சுற்றுப்பயண கால அட்டவணை தொடர்பில் இலங்கைக் கிரிக்கெட் சபை அனைத்து தரப்பிடமும் விபரங்களை பகிர்ந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அணி நான்கு ஆண்டுகளின் பின்னரே இந்தியாவுடன் டெஸ்ட் தொடர் ஒன்றில் ஆடவுள்ளது. கடைசியாக இரு அணிகளும் கடந்த மார்ச் மாதம் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்தியாவில் நடைபெற்ற இந்த தொடரில் இந்திய அணி 2–0 என தொடரை முழுமையாக வென்றது. இலங்கை அணி இந்தியாவை கடைசியாக டெஸ்ட் போட்டி ஒன்றில் வென்றது கடந்த 2017 ஆம் ஆண்டில் என்பது குறிப்பிடத்தக்கது.



