மும்பையில், டீ கிளாஸை உடைத்ததற்காக மூன்று வயது சிறுவன் ஒருவனை கொலை செய்த நபருக்கு தற்போது ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
உதவுவதுபோல் நடித்து…
2017ஆம் ஆண்டு, ரயிலில் தன் இரு குழந்தைகளுடன் பயணித்துக்கொண்டிருந்த ஒரு பெண், நிதின் (Nitin Pathare, 44) என்னும் நபரிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது அவர், தான் தன் கணவனைப் பிரிந்து வாழ்வதாகவும், பணத்துக்கு கஷ்டப்படுவதாகவும் கூற, நிதின் அந்தப் பெண்ணுக்கு உதவுவதாக கூறி மும்பைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், மும்பைக்குச் சென்றதும் அவரது சுயரூபம் தெரியவந்துள்ளது. பிள்ளைகளைப் பிடித்துவைத்துக்கொண்டு மிரட்டி அந்தப் பெண்ணை வேலைக்கு அனுப்பியுள்ளார் அவர்.
ஒரு நாள் அந்தப் பெண்ணின் மகனான மூன்று வயது சிறுவன் ஒரு டீ கிளாஸை கைதவறி கீழே போட்டு உடைத்துவிட, அவனை பெல்ட்டால் அடித்து நொறுக்கி, கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டார் நிதின்.
பின்னர் அவனது உடலை ஓரிடத்தில் கொண்டு புதைத்தும்விட்டார் அவர்.
வெளியே எதுவும் சொல்ல முடியாமல் நிதினுடைய கட்டுப்பாட்டில் இருந்த அந்தப் பெண், மீண்டும் ஒரு முறை நிதின் அவரைத் தாக்க, வீட்டை விட்டுத் தப்பி வெளியேறி அக்கம்பக்கத்திலுள்ளவர்களிடம் உதவி கோர, அவர்கள் பொலிசாரை அழைத்துள்ளார்கள்.
பொலிசார் வந்ததும் தன் மகன் கொல்லப்பட்ட விடயம் முதல் எல்லா விடயங்களையும் அவர் கூற, நிதின் கைது செய்யப்பட்டுள்ளார், கொன்று புதைக்கப்பட்ட சிறுவனின் உடலை பொலிசார் மீட்டுள்ளார்கள்.
அந்தச் சிறுவன் அடித்துக் கொல்லப்படும்போது அவனுடைய அக்காவுக்கு அப்போது ஐந்து வயது. இப்போது அவள் வளர்ந்துவிட்டாள்.
அவள் தன் தம்பியை நிதின் பெல்ட்டால் அடித்தது முதல் அனைத்தையும் திகிலுடன் விவரிக்க, அவளது சாட்சியத்தை முக்கிய சாட்சியமாக ஏற்றுக்கொண்ட நீதிபதி, நிதினுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.




