மத்திய கிழக்கு போர் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பல நாடுகள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணி புரிய அறிவுறுத்தியுள்ளது.
இதே போல், இந்தியாவிலும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.
LPG நிறுத்தப்படும் என எச்சரிக்கும் அரசு
இந்நிலையில், PNG இணைப்பு உள்ள இடங்களில், நுகர்வோர் குழாய்வழி இயற்கை எரிவாயுவிற்கு மாறாவிட்டால், வீடுகளுக்கான சமையல் எரிவாயு (LPG) விநியோகம் நிறுத்தப்படும் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
![]()
இந்தியாவின் எரிவாயு விநியோக வலையமைப்பை விரிவுபடுத்துவதை விரைவுபடுத்துவதையும், ஒரே எரிபொருளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் நோக்கமாக கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஏற்கனவே PNG விநியோகத்திற்கான குழாய் வசதி இருந்தபோதிலும், நுகர்வோர் PNG மாற மறுத்தால், 3 மாதங்களுக்குப் பிறகு எல்பிஜி (LPG) விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற வீடுகளை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் பல்வகைப்படுத்தப்பட்ட PNGக்கு மாற்றுவதன் மூலம், PNG குழாய்வழி அணுகல் இல்லாத கிராமப்புறங்களுக்கு கையிருப்பில் உள்ள LPGக்களை வழங்கி தட்டுப்பாட்டை சரி செய்ய முடியும்.
குழாய் இணைப்பு வழங்குவது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது என அங்கீகரிக்கப்பட்ட எரிவாயு விநியோக நிறுவனம் தடையில்லாத சான்றிதழ்(NOC) வழங்கினால் எல்பிஜி விநியோகம் நிறுத்தப்படாது.
வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த சீர்திருத்தங்கள் “ஒரு நெருக்கடி ஒரு வாய்ப்பாக மாற்றப்பட்டுள்ளது” என்று கூறி, இந்த மாற்றத்தை ஒரு மூலோபய திருப்பு முனை என எண்ணெய் துறை செயலாளர் நீரஜ் மிட்டல் தெரிவித்துள்ளார்.
பொது அதிகார அமைப்புகள், கண்டிப்பாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் வழித்தடத்திற்கான அனுமதிகளை வழங்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், ஒப்புதல் வழங்கப்பட்டதாகவே கருதப்படும். இதற்காக கூடுதல் கட்டணங்கள் வசூலிக்க கூடாது.




