ரஷ்யா – உக்ரைன் போரின் நடுவே புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வசிக்கும் Novgorod பகுதியில் உள்ள குடியிருப்பை 91 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்க முயன்றதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், “அனைத்து ட்ரோன்களும் ரஷ்ய வான்வழி பாதுகாப்பு அமைப்பால் அழிக்கப்பட்டன. உயிரிழப்போ, சேதமோ எதுவும் இல்லை. இது ‘அரசு பயங்கரவாதம்’ எனக் கருதப்படுகிறது. இதற்கு ரஷ்யா பதிலடி கொடுக்கும்” என்று எச்சரித்துள்ளார்.
ஆனால், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்த குற்றச்சாட்டை “மற்றொரு பொய்” எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

“ரஷ்யா, அமைதி பேச்சுவார்த்தையை சிதைக்கவும், கீவ் மீது புதிய தாக்குதல்களுக்கு காரணம் உருவாக்கவும் முயல்கிறது” என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், “ரஷ்யா உக்ரைன் அரசாங்க கட்டிடங்களை தாக்கத் திட்டமிடுகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பிலான இந்த குற்றச்சாட்டுகளும் மறுப்புகளும், அமெரிக்கா – உக்ரைன் அமைதி முயற்சிகளை பாதிக்கக்கூடும் எனக் கவலை எழுந்துள்ளது.
ஜெலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனடியாக பதிலளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், புடின், தெற்கு உக்ரைனின் Zaporizhzhia பகுதியை முழுமையாக கைப்பற்ற ரஷ்ய படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய படைகள் தற்போது சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் நகரை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்ப் – புடின் இடையே “நல்ல உரையாடல்” நடந்ததாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்தச் சம்பவம், ரஷ்யா – உக்ரைன் இடையிலான ஆழமான நம்பிக்கையின்மையை மீண்டும் வெளிப்படுத்துகிறது. அமைதி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதால், போர்நிறுத்தம் எப்போது சாத்தியமாகும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.




