ஹொர்முஸ் நீரிணையைத் திறந்த நிலையிலும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துரையாடியுள்ளனர்.
இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான இந்த உரையாடல் சுமார் 40 நிமிடங்கள் நீடித்துள்ளன. இந்த உரையாடல் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி, ‘எனது நண்பர் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. பல்வேறு துறைகளில் நமது இருதரப்பு ஒத்துழைப்பில் எட்டப்பட்ட கணிசமான முன்னேற்றங்கள் குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம்.

அனைத்துத் துறைகளிலும் நமது விரிவான உலகளாவிய மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நாங்கள் மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்தும் விவாதித்தோம். மேலும் ஹொர்முஸ் நீரிணையைத் திறந்த நிலையிலும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினோம் என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் மோதல், விமானப் பயணம் முதல் கப்பல் போக்குவரத்து, எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் வரையிலான துறைகளைப் பாதித்துள்ளமை தெரிந்ததே.




