மாலைதீவில் எதிர்வரும் ஜூன் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தெற்காசிய வேக ஸ்கேற்றிங் சம்பியன்ஷிப் போட்டியில், யாழ்ப்பாண மாவட்டம் சார்பில் கலந்துகொள்ளும் ஒரே ஒரு மாணவியான ஷாருதி தர்மரூபன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் தரம் 9 இல் கல்வி கற்கும் இம்மாணவி, ட்ரீமர் யுனைடெட் ஸ்போட்ஸ் அகடமி சார்பாக இப்போட்டியில் பங்கேற்கவுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (12) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, போட்டியின் விபரங்களைக் கேட்டறிந்த அரசாங்க அதிபர், யாழ். மாவட்டத்திலிருந்து மாணவி ஒருவர் சர்வதேச அரங்கிற்குத் தெரிவாகியுள்ளதையிட்டுத் தனது மகிழ்ச்சியை வெளியிட்டதுடன், போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இச்சந்திப்பில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் கே.விஜிதரன், விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எல். அநுரகாந்தன், கல்லூரி ஆசிரியர் மற்றும் மாணவியின் தாயார் ஆகியோர் கலந்துகொண்டனர்.



