சமீபகாலமாக அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர்களால், பூர்விக அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிபோவதாக விவாதம் எழுந்துள்ளது.
ஆனால், புலம்பெயர்ந்தோர்கள் வேலைகளை பறிக்கவில்லை, அமெரிக்காவின் 3 இல் 2 பங்கு யூனிகார்ன்களை உருவாக்கியுள்ளனர் என அமெரிக்கக் கொள்கைக்கான தேசிய அறக்கட்டளையின் (NFAP) அறிக்கை தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்தோரால் உருவாக்கப்பட்ட யூனிகார்ன்கள்
1 பில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் யூனிகார்ன்கள் என அழைக்கப்படுகிறது.
இந்த அறிக்கையின்படி, அமெரிக்காவின் 775 யூனிகார்ன்களில் 455 நிறுவனங்களை புலம்பெயர்ந்தோர் நிறுவியுள்ளனர் அல்லது இணைந்து நிறுவியுள்ளனர்.

இது அமெரிக்காவின் யூனிகார்ன்களில் 59% ஆகும். அதேபோல், சுமார் 80% நிறுவனங்களில் நிறுவனரோ அல்லது ஒரு முக்கிய தலைமைப் பதவியிலோ புலம்பெயர்ந்தோரே உள்ளனர்.
இதில், அதிகபட்சமாக இந்திய வம்சாவளியினர் 96 யூனிகார்ன்களை உருவாக்கியுள்ளனர். 60 யூனிகார்ன்களுடன் இஸ்ரேல் 2வது இடத்திலும், 47 யூனிகார்ன்களுடன் பிரித்தானியா 3வது இடத்திலும், 41 யூனிகார்ன்களுடன் சீனா 4வது இடத்திலும், 30 யூனிகார்ன்களுடன் கனடா 5வது இடத்திலும் உள்ளது.

இதில், தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இணைந்து உருவாக்கிய Perplexity AI, 20 பில்லியன் டொலர் மதிப்புடன் 12வது இடத்தில் உள்ளது.
இதில் ஒவ்வொரு நிறுவனமும் சராசரியாக 833 பேருக்கு வேலை வழங்குகிறது. எலான் மஸ்க் உட்பட 15 புலம்பெயர்ந்தோர், 2 அல்லது அதற்கு மேற்பட்ட யூனிகார்ன் நிறுவனங்களை நிறுவியுள்ளனர். இந்த பட்டியலில் 6 இந்தியர்கள் உள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் பிறந்த எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ், ஓபன்ஏஐ, தி போரிங் கம்பெனி மற்றும் நியூராலிங்க் ஆகிய 4 யூனிகார்ன் நிறுவனங்களை நிறுவியுள்ளார் அல்லது இணைந்து நிறுவியுள்ளார். மேலும், டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார்.

லெபனானில் பிறந்த தொழிலதிபரான நௌபர் அஃபேயன், மாடர்னா, இண்டிகோ ஏஜி, ஜெனரேட் பயோமெடிசின்ஸ், டெஸ்ஸெரா தெரபியூடிக்ஸ் மற்றும் லிலா சயின்சஸ் ஆகிய 5 யூனிகார்ன் நிறுவனங்களை நிறுவியுள்ளார்.



