இனி நிதிப் பரிமாற்றங்களுக்கு TIN சான்றிதழ் கட்டாயம்

1 Min Read

உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலத்திற்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன நேற்று (03) தனது சான்றொப்பத்தை இட்டுள்ளார்.

உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பு மீதான விவாதம் கடந்த 2026 மே 19ஆம் திகதி நடைபெற்றதோடு, அதன் போது இச்சட்டமூலம் திருத்தங்களுடன் அங்கீகரிக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தைத் திருத்தங்களுடன் அங்கீகரித்ததன் மூலம், வரி நிர்வாகச் செயல்முறைகளை நவீனப்படுத்துதல், தற்போதுள்ள விதிகளின் தெளிவை அதிகரித்தல், வரி இணக்கம் மற்றும் வரிச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை வலுப்படுத்துதல் ஆகிய பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும், வரி கணிப்பீடுகள் மற்றும் வரி விலக்குகளை மிகவும் துல்லியமாக்குதல், மூலோபாய பொருளாதாரத் தேவைகளுக்கு ஆதரவளித்தல், அத்துடன் வெளிப்படைத்தன்மை மற்றும் பணமோசடியைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை மேம்படுத்துவதுமே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

குறிப்பிட்ட சில நிதிப் பரிமாற்றங்களின் போது வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) சான்றிதழைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்குதல், வருமானத்தைக் கணக்கிடும் முறையில் சில திருத்தங்களை மேற்கொள்ளுதல், குறிப்பிட்ட சில திட்டங்கள் மற்றும் வணிகங்களுக்கு வழங்கப்படும் வரி விலக்குகளை மேலும் தெளிவுபடுத்துதல் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல்களை வெளிப்படுத்தும் வரம்பை விரிவுபடுத்துதல் போன்ற சில முக்கிய மாற்றங்கள் இந்த புதிய சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, இந்த உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலம், 2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *