செம்மணி புதைகுழியிலிருந்து, ஒன்றன் மேல் ஒன்றாக இருந்த இரண்டு என்புக்கூடுகளும், சிறுவர்களுடைய என்புக்கூடுகளும் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்தார். மேலும், மற்றொரு என்புக்குவியல் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதனைச் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றையதினம் 13ஆவது நாளாக நடைபெற்றது. இதுகுறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நேற்றைய அகழ்வின்போது 8 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அவற்றில் 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. ஒன்றன் மேல் ஒன்றாக இருந்த இரண்டு என்புத் தொகுதிகளும், சிறுவர்களுடைய என்புத் தொகுதியும் இதில் அடங்கும். மேலதிகமாக ஒரு என்புக்குவியல் அடையாளம் காணப்பட்டுள்ளது, அதனைச் சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஒரு என்புக்கூட்டின் கால் பகுதி சிதைவடைந்த நிலையில் காணப்பட்டது. அதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. ஆய்வுகளின் பின்னரே அது குறித்து உறுதிப்படுத்த முடியும். அதேவேளை நேற்றைய தினமும் என்புக்கூட்டுடன் செப்புத் துண்டொன்று சான்றுப் பொருளாக மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.



