இலங்கை சிறையிலுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்

2 Min Read

இலங்கை சிறையிலுள்ள 58 இந்திய மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள அவர்களது 266 படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நேரில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும், காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகேதாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய

கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஜோசப் விஜய் முன்வைத்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் ஜோசப் விஜய் புதுதில்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் புதன்கிழமை (27) மாலை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி தனது நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின்போது, ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்ததற்காக முதல்வர் ஜோசப் விஜய் நன்றி தெரிவித்தார். மேலும், மாநில வாழ்த்துப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே எப்போதும் பாடப்பட்டு வருகிறது என்றும், உள்துறை அமைச்சகத்தால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட குறிப்பாணையைத் தொடர்ந்து, சில குறிப்பிட்ட அரசு நிகழ்ச்சிகளில், தேசியப் பாடல் முதலாவதாகப் பாடப்பட்டு வருகிறது என்றும், இந்நிலையில், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப் பாடலைப் பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையினை வழங்குமாறு முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டார். மேம்பட்ட நடுத்தர போர் விமான (AMCA) வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் வான்வழி அமைப்பு மையம் (CABS) ஆகியவற்றை தமிழ்நாட்டில் அமைப்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (DRDO) ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், வான்வழி அமைப்பு மையத்தினை (CABS) தமிழ்நாட்டில் அமைக்குமாறு முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணைத் திட்டத்துக்கான பூமி பூஜையை நடத்தவுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் அறிவித்திருப்பது காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதித் தீர்ப்புக்கும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் முற்றிலும் முரணானது என்றும், இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு விவசாயிகளிடையே பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேற்காணும் திட்டத்தினை அனுமதிக்கக் கூடாது என ஜல் சக்தி அமைச்சகத்துக்கும், மத்திய நீர்வள ஆணையத்துக்கும் பிரதமர் அறிவுறுத்துமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *