உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் அரசாங்கத்தின் நகர்வுகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்குமென பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அரசாங்கத்தின் நகர்வுகள் தொடர்பாக நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நிலவிவரும் தீவிரமான பதற்றநிலை காரணமாக சர்வதேச வர்த்தகத்தின் முக்கிய கடல் வழித்தடமான ‘ஹோர்முஸ் நீரிணை’ மூடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இதன் நேரடித் தாக்கத்தால் பல நாடுகள் கடுமையான பொருளாதார பாதிப்பு மற்றும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் காரணிகளால் எமது நாடு எதிர்கொள்ளும் அசாதாரண பொருளாதார நெருக்கடி வேளையில் அரசாங்கத்தின் மீது வெறுமனே அரசியல் ரீதியான விமர்சனங்களை முன்வைப்பதை விடுத்து, தேசத்தின் நலனை கருத்திற்கொண்டு இந்தச் சவாலை முறியடிப்பதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எப்பொழுதும் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



