இன்று (25) முற்பகல் தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, இவ்வாறு பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ரூ. 5 இலட்சம் கொண்ட ஒரு சரீரப் பிணையின் அடிப்படையில் அவரை விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மே 18ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள இராணுவ நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படைவீரர் தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நிகழ்வுக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



