இந்திய அரசாங்கத்தின் 600 மில்லியன் இலங்கை ரூபா நன்கொடை உதவியின் கீழ் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் நான்கு மாடி மருத்துவ விடுதி வளாகத்தை நிர்மாணிப்பதற்காக அண்மையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
ஏப்ரல் 19-, 20ம் திகதிகளில் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் டாக்டர் டபிள்யூ கே. விக்ரமசிங்க ஆகியோரால் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு பரிமாறப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் நான்கு மாடி மருத்துவ விடுதி வளாகத்தை நிர்மாணிக்கும் இந்தத் திட்டத்தில் உயிர் காக்கும் உபகரணங்கள், குளிரூட்டி முறைமைகள், தீயணைப்பு பொறிமுறைகள் மற்றும் யுபிஎஸ் முறைமை, தீ பாதுகாப்பு மற்றும் குழாய் மூலமாக மருத்துவ வாயு விநியோக முறை உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நவீன வசதிகள் ஆகியவற்றை வழங்குதல் போன்றவையும் உள்ளடங்குகின்றன.
முன்மொழியப்பட்ட இந்த மருத்துவ விடுதி வளாகமானது, 35 வயதுக்கு மேற்பட்டவர்களின் பரிசோதனைகளை கணிசமான அளவில் அதிகரித்து தொற்றா நோய்கள் மூலமாக ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்த்தல் மற்றும் ஏனைய மருத்துவமனைகளுக்கு நோயாளர்களை மாற்றும் நடவடிக்கைகளை குறைத்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளது. இத்திட்டம் நிறைவடையும் நிலையில் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள்நோயாளர்களின் எண்ணிக்கை 150 வீதத்தினால் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக அம்மாவட்டத்தின் சுகாதார பராமரிப்பு நடவடிக்கைகள் மேம்பட உள்ளன.
இந்த திட்டமானது உயர் பெறுபேற்றினை கொண்ட சமூக அபிவிருத்தி திட்டங்கள் என்ற கட்டமைப்பின் கீழ் முன்னெடுக்கப்படுவதுடன் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் இவ்வாறான மக்களை இலக்காகக் கொண்ட நன்கொடை அடிப்படையிலான 18 திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வீடமைப்பு, சுகாதாரம், கல்வி, மீன்பிடி, போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாழ்வாதார உதவிகள், விவசாயம் உள்ளிட்ட பல துறைகளிலும் மக்களின் நாளாந்த வாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தினை இவ்வாறான திட்டங்கள் ஏற்படுத்துகின்றன.



