எப்பாவல நகரில் அமைந்துள்ள தேசிய பாடசாலையில் இன்று (13) இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 5 மாணவர்கள் காயமடைந்து எப்பாவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் 12 ஆம் தரத்தில் தொழில்நுட்பப் பிரிவில் பயிலும் 5 மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக, இன்று காலை சிறிய கத்தி ஒன்றுடன் பாடசாலைக்கு வந்த 12 ஆம் தர அறிவியல் பிரிவு மாணவர் ஒருவர், மற்றைய மாணவரைத் தாக்கியுள்ளார்.
இந்த மோதலைத் தடுத்து நிறுத்தச் சென்ற மேலும் நான்கு மாணவர்களும் கத்திக் குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.
தாக்குதலை நடத்திய மாணவர் பயன்படுத்திய கத்தியுடன் எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்த மாணவர்களின் நிலைமை பாரதூரமானது அல்ல என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எப்பாவல பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



