இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், புதிதாக பதவியேற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய்க்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது…
தமிழக மக்களின் பேராதரவையும், அசைக்க முடியாத நம்பிக்கையையும் பெற்று, தமிழ்நாட்டின் முதலமைச்சராக தாங்கள் பொறுப்பேற்றுள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும், இந்திய வம்சாவளி மலையக மக்கள் சார்பிலும், எனது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தங்களின் இந்த வெற்றி என்பது ஒரு அரசியல் சாதனையை மட்டும் பிரதிபலிப்பதல்ல; புதிய தலைமுறையின் எதிர்பார்ப்புகள், மக்களின் மாற்றத்திற்கான விருப்பம் மற்றும் ஜனநாயகத்தின் வலிமை ஆகியவற்றின் வெளிப்பாடாகும்.
தங்களின் தொலைநோக்கு தலைமையின் கீழ், நீதி, சமத்துவம், சமூக ஒற்றுமை மற்றும் நிலையான வளர்ச்சி ஆகிய உயரிய பண்புகளுடன் தமிழ்நாடு மேலும் முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும் என மனமார வாழ்த்துகின்றேன்.
மேலும், தமிழ்நாட்டின் முன்னாள் தலைவர்களுடன் எமது சமூக நலன் மற்றும் இருநாட்டு தமிழ் மக்களின் முன்னேற்றம் கருதி உருவாக்கப்பட்ட நட்புறவும் ஒத்துழைப்பும், தங்களின் தலைமையிலும் மேலும் வலுப்பெறும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்குள்ளது.
மக்கள் நலன், முன்னேற்றம் மற்றும் மனிதநேய ஆட்சி என்ற உயரிய இலக்குகளுடன் தங்களின் ஆட்சி தமிழ்நாட்டை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.



