டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி போடைஸ் வழியாக பயணித்த தனியார் பஸ் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விபத்துக்குள்ளாகியதில், பாடசாலை மாணவர்கள் உட்பட 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து இன்று (29) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் டிக்கோயா, படல்கல பகுதியில் இடம்பெற்றுள்ளது.


மற்றொரு பேருந்திற்கு இடம் கொடுக்க முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியிலிருந்து விலகி பள்ளத்தில் விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து நேரத்தில் குறித்த பேருந்தில் சுமார் 35 பேர் பயணித்திருந்ததாகவும், ஓட்டுநரும் உதவியாளரும் காயமடைந்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.



