மட்டக்களப்பில் பரபரப்பினை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் நகைக்கடை உரிமையாளர்கள் இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் நீதிமன்ற தொகுதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் சந்தேக நபர்கள் நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ.தர்சினி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேக நபர்களிடம் நகைகளை கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படும் நகைக்கடை உரிமையாளர்கள் இருவரும் பிணையில் விடுக்கப்பட்டதுடன் ஏனைய நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
கடந்த மாதம் 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வவுணதீவு கொத்தியாபுலை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடனும் ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் ஒருவர் சடலமாகவும் கிணற்றில் இருந்தும் இளம்தாயின் 3 வயது சிறுமி கொத்தியாபுலை வயல் பகுதியில் உயிருடனும் மீட்கப்பட்டிருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வர்ன ஜெயசுந்தரவின் வழிகாட்டலில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் நேரடி கண்காணிப்பில் கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணை முன்னெடுத்தனர்.
இதன்போது வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் அவரது 34 வயதுடைய கணவர் அவரது 22 வயதுடைய தம்பியார் மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய ஊறணி, திருகோணமலை வீதிகளைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் மயக்க மருந்துகளைப் பெற்றுக்கொண்ட முச்சக்கரவண்டி சாரதி மற்றும் மயக்க மருந்துகளை விநியோகம் செய்த மருந்து விநிநோகஸ்தர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு விளக்கறியிலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மயக்க மருந்துகளைப் பெற்றுக்கொண்ட முச்சக்கர வண்டி சாரதி ஏற்கனே பிணையில் விடுக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு நகைக்கடை உரிமையாளர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் ஏனையவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



