ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் போது கடினமான தரையிறக்கத்தை மேற்கொண்டு சிறிய விபத்தில் சிக்கியுள்ளது.
ஏர் இந்தியா விமானம் விபத்து
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737 மேக்ஸ் 8 விமானம், இன்று காலை 6:42 மணிக்கு ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து, 133 பயணிகளுடன் தாய்லாந்தின் புக்கெட் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டது.

இந்த விமானம், புக்கெட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, முன்பக்க சக்கரத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
விமானத்தின் முன்பக்க சக்கரம் உடைந்துள்ளதால், அந்த விமானத்தை ஓடுதளத்தில் அகற்ற முடியாத நிலை உள்ளது.

இதனை தொடர்ந்து அந்த ஓடுதளம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு தரையிறங்க வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
ஓடுதளத்தின் நிலைமை குறித்து விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
விமானத்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கல் ஏற்பட்டதாகவும், அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.



