மெனிங் சந்தை வளாகத்தை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

1 Min Read

இலங்கையின் நாலாபாகங்களிலிருந்தும் கொண்டு வரப்படும் மரக்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்வதற்கும் கொள்வனவு செய்வதற்கும் தினசரி பல்லாயிரக்கணக்கான வியாபாரிகளும் நுகர்வோரும் வந்து செல்லும் முக்கிய மையமாகப் பேலியகொட மெனிங் சந்தை விளங்குகிறது. எனினும், தற்போதைய சூழலில் இந்த சந்தை வளாகத்தின் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் வசதிகள் வியாபார நடவடிக்கைகளுக்குப் போதுமானதாக இல்லை எனப் பரவலான குறைபாடுகள் இனம் காணப்பட்டிருந்தன.

பொதுமக்களினதும் வியாபாரிகளினதும் இந்தச் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் சௌகரியக் குறைபாடுகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், “Clean Manning” எனும் விசேட தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் இன்று காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வு கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னில தலைமையில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மெனிங் சந்தையை முழுமையான தூய்மையான மற்றும் சுகாதாரமான வர்த்தக வலயமாக மாற்றுவதற்காகப் பல முக்கிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்தத் தூய்மைப்படுத்தல் பணியை ஏற்பாடு செய்துள்ளன:

பேலியகொட மெனிங் சந்தை பொது வர்த்தக சங்கம்
பேலியகொட நகர சபை
பேலியகொட பொலிஸ் நிலையம்
நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA)

அமைச்சரின் இந்த விசேட ஆரம்ப நிகழ்வில், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், பேலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (HQI), மெனிங் சந்தை பொது வர்த்தக சங்கத்தின் தலைவர், பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படைப் பிரிவினர் மற்றும் மெனிங் சந்தையின் பெருந்திரளான வியாபாரப் பெருமக்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து சிரமதானப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

வியாபாரிகள் மற்றும் நுகர்வோரின் அன்றாடப் பணிகளுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில், இந்தத் தூய்மைப்படுத்தல் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகள் மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *