மத்திய காசாவின் டெய்ர் அல்-பாலாவில் அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அல் யாபா வைத்தியசாலையின் மயக்கமருந்து கொடுக்கும் பிரிவுத் தலைவர் டொக்டர் ஜமால் அபு அபூன் நேற்று முன்தினம் கொல்லப்பட்டார்.
மருத்துவமனைக்கு அருகில் பொதுமக்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் டொக்டர் ஜமால் அபு அவுன் உட்பட இருவர் கொல்லப்பட்டதாக அல் அக்ஸா மருத்துவமனை வட்டாரங்கள் குறிப்பிட்டன. இத்தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒரு சிறுவர் அடங்கியுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் இஸ்ரேலியக் குடியேறிகள் பலஸ்தீனியர்களின் வீடுகளையும் சொத்துக்களையும் தாக்கியுள்ள நிலையில், காசாவில் இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதல்களில் இவர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். ஏற்கனவே நடைமுறையிலுள்ள யுத்த நிறுத்தத்தை மீறும் வகையில் இத்தாக்குதலும் அமைந்ததாக காசா ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. காசா நகரின் பரபரப்பான வர்த்தகப் பகுதிகளில் ஒன்றான ஃபிராஸ் சந்தைக்கு அருகில் சனிக்கிழமை பிற்பகலில், இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் மற்றொரு பலஸ்தீனியர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் பலஸ்தீனிய செய்தி நிறுவனமான வஃபா தெரிவித்துள்ளது.



