இலங்கை ரக்பி செவன்ஸ் அணி பிரான்ஸில் நடைபெறும் ஹோர்வாட் ஹின்டன் செவன்ஸ் போட்டியில் பங்கேற்பதற்காக பயணமாகியுள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராகும் வகையில் இலங்கை அணி இந்தப் போட்டியில் பங்கேற்பதாக இலங்கை ரக்பி தலைவர் பவித்ர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னணி ரக்பி செவன்ஸ் அணிகளை எதிர்த்தாடுவதற்கு இந்தத் தொடரில் இலங்கை அணிக்கு வாய்ப்பு கிடைக்கவுள்ளது. இலங்கை ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்லும் எதிர்பார்ப்புடன் இருப்பதோடு பிரான்ஸில் நடைபெறும் போட்டிகள் அதற்கு வலுவூட்டுவதாக அமையும் என்று நம்பப்படுகிறது.
அண்மையில் நடைபெற்ற மத்திய ஆசிய சம்பியன்சிப் பட்டத்தை வென்ற இலங்கை ரக்பி செவன்ஸ் அணி வலுவான அணி ஒன்றாகவே நேற்று முன்தினம் (27) பிரான்ஸை நோக்கி பயணித்தது. இலங்கை அணியின் தலைவராக பசிந்து சூர்யபண்டாரவும் உப தலைவராக ஜனிது டில்ஷானும் செயற்படுகின்றனர். சதுர விதானலாகே, ஆகாஷ் மதுஷங்க, கவிந்து கொஸ்தா, கவிந்து பெரேரா, ரவிந்து அஞ்சுல, ரமித்த நிமேஷ், சுரங்க தென்னகோன், திலுக்ஷ தங்கெ, கயான் பெரேரா, சமோத் முத்துநாயக்க ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஹோர்வாட் ஹின்டன் செவன்ஸ் போட்டியில் பிரான்ஸின் 11 ரக்பி கழகங்கள் இடம்பெற்றிருப்பதோடு, மொனாகொ மற்றும் சுவிட்சர்லாந்து ரக்பி செவன்ஸ் அணிகளும் பங்கேற்கின்றன.



