நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் மீன்பிடி மற்றும் கப்பல் துறையினர் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக சிலாபம் வரை, காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற் பகுதிகளுக்கு, 24 மணி நேரத்திற்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்படி கடற் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 முதல் 65 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும், கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அப்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கப்பல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் மற்றும் கப்பல் துறையினர் இதைக் கவனத்திற் கொண்டு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அந்தத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.



