இந்திய விமானப்படைக்னெ பிரான்ஸிடமிருந்து 114 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது. சுமார் 38 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான கோரிக்கை கடிதம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கோரிக்கை கடிதம் எதிர்வரும் நாட்களில் முறைப்படி பிரான்ஸுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த விமானங்கள் கொள்வனவு ஒப்பந்தத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இந்திய விமானப்படைத் தலைவர் ஏயார் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் ஜூன் மாத தொடக்கத்தில் பிரான்ஸுக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த 114 ரபேல் போர் விமானங்களில் சுமார் 90 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும். முன்மொழியப்பட்டுள்ள இவ்விமான ஒப்பந்த திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படும் விமானங்களை பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன், இந்திய நிறுவனமொன்றுடனான கூட்டாண்மை மூலம் இந்தியாவில் தயாரிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
ஏனைய 24 விமானங்களும் பிரான்சிலிருந்து பறக்கும் நிலையில் வழங்கப்படவிருக்கிறது. இந்த விமானங்களைத் தவிர, விமானந்தாங்கி கப்பல் செயல்பாடுகளுக்காக டசால்ட் நிறுவனத்திடமிருந்து 26 ரஃபேல் மரைன் விமானங்களை கடற்படை தனியாக கொள்முதல் செய்வதும் குறிப்பிடத்தக்கது.



