திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன எனனும் சந்தேகநபரை படுகொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 69 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றப்பிரிவினர் (CCD) முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், நேற்று (13) இரவு கம்பஹா, ஸ்ரீ போதி வீதி பகுதியில் வைத்து இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 2025 பெப்ரவரி 19 ஆம் திகதி, கொழும்பு இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காகக் அழைத்துவரப்பட்டிருந்த போதே ‘கணேமுல்ல சஞ்சீவ’ சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது சட்டத்தரணி ஒருவரைப் போல வேடமணிந்து நீதிமன்ற அறைக்குள் நுழைந்த ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருந்தார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், வெளிநாடுகளில் வசிக்கும் திட்டமிட்ட குற்ற கும்பல்களுடன் இணைந்து இந்தக் கொலையைத் திட்டமிட்டமை, தாக்குதலுக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கியமை தொடர்பில் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ரிப்பீட்டர்’ (Repeater) ரக துப்பாக்கி ஒன்று, 10 தோட்டாக்கள் மற்றும் 2 மெகசின்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த ஒஸ்மன் குணசேகர எனும் கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேகநபர் தொடர்பாகக் கொழும்பு குற்றப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



