பாதிக்கப்பட்ட தோட்ட மக்கள் மீள்குடியேற தற்காலிக வீடுகள்

3 Min Read

வீடுகளை இழந்து கூடாரங்களில் வசிக்கும் மலையகப் பெருதோட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்கு முன்னுரிமையளித்து செயற்படுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் மழைக்காலத்துடன் அந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவர்களை மீள்குடியேற்றுவதில் முன்னுரிமையளித்து செயற்படுமாறும் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கான காணி ஒதுக்கீட்டுப் பணிகளை விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, அந்த காணிகளில் நிரந்தர வீடுகள் கட்டப்படும் வரை, அவ்விடத்திலேயே தற்காலிக வீடொன்றை விரைவாக அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை வழங்கினார்.
தித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த நுவரெலியா மாவட்ட மக்களின் மீள்குடியேற்றத் திட்ட முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்துசேதங்களுக்கான இழப்பீடு வழங்குதல், வர்த்தக ரீதியான பாதிப்புகளுக்கு நட்டஈடு வழங்குதல் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராய்ந்த ஜனாதிபதி, மீள்குடியேற்றம் மற்றும் காணி அடையாளங்காணும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் பிரதேச மற்றும் மாவட்டசெயலக மட்ட ரீதியாக தனித்தனியாகக் கேட்டறிந்தார். தித்வா சூறாவளி காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, நுவரெலியா, நோர்வூட், நில்தண்டாஹின்ன, கொத்மலை மேற்கு, தலவாக்கலை, வலப்பனை, மதுரட்ட, ஹங்குரங்கெத்த மற்றும் கொத்மலை கிழக்கு ஆகிய 10 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 18,266 குடும்பங்களைச் சேர்ந்த 61,833 நபர்கள் பாதிக்கப்பட்டதுடன், இதில் தோட்டப்பகுதிகளில் 675 வீடுகளும், கிராமப்புறங்களில் 1,565 வீடுகளும் முழுமையாக சேதமடைந்தன. தோட்டப்பகுதிகளில் 612 வீடுகளும் கிராமப்புறங்களில் 153 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்தன. அத்துடன் 93 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இங்கு விரிவாக ஆராய்ந்தார்.
அண்மைய காலத்தில் ஏற்பட்ட மிகப் பாரிய பேரழிவான தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுக்கும் செயல்முறையின் ஆரம்பத்தில் சில சிக்கல்கள் காணப்பட்ட போதிலும், முறையான திட்டமிடல் மற்றும் அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பு காரணமாக அவற்றை வெற்றிகரமாகக் கடந்து, முதற்கட்டப் பணிகளில் கணிசமான பகுதியை முடிக்க முடிந்ததாக ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

இதன் உண்மையான பலன்கள் மக்களுக்குக் கிடைக்க வேண்டுமாயின், இந்தச் செயல்முறை வெற்றிகரமாக நிறைவடைய வேண்டும் என்றும், எனவே மீள்குடியேற்றம் உள்ளிட்ட இரண்டாம் கட்டப் பணிகளையும் மிகக் குறுகிய காலத்தில் வெற்றிகரமாக முடிப்பதற்கு அனைத்து அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் ஏற்பட்டதைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் நாட்டில் ஏற்படாதவாறு, நாட்டின் பொருளாதாரத்தைக் கையாளும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்றும், அங்கு வலுவான நிதி ஒழுக்கத்துடன் முக்கியமான அளவுகோல்களின் படி செயற்பட வேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதியைச் சரியாகப் பயன்படுத்தி, அதன் பலன்களை விரைவாக மக்களுக்கு வழங்க அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான மஞ்சுள சுரவீரஆரச்சி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர்.ஜி. விஜேரத்ன, வி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *