நாட்டுக்கு தற்போது ஒரு புதிய சகாப்தம் தேவை என தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷா டி சில்வா, தேசிய நலனுக்காகத் தேவைப்படும்போது எந்தவொரு சவாலையும் ஏற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். ‘நாட்டிற்கு ஒரு புதிய யுகம் தேவை’ என்ற தலைப்பின் கீழ், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு அவரது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கிலும் வெளியிடப்பட்டுள்ளது. தனது குடும்ப உறுப்பினர்கள் எவரும் அரசியல் வாழ்வில் ஈடுபட்டதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், அரசியல் தனது தனிப்பட்ட பயணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிறு வயதிலிருந்தே, நாட்டின் மீது தனக்கு ஒரு வலுவான அக்கறை உணர்வும், இலங்கை ஒருநாள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற நம்பிக்கையும் இருந்துவந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பொறுப்புணர்வே தனது அரசியல் பிரவேசத்துக்கு பின்னால் இருந்த உந்துசக்தியாகும். அந்த நீண்டகால தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கான தனது முயற்சிகளுக்கு இந்த அர்ப்பணிப்பு மாறாமல் தொடர்ந்து வழிகாட்டி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
குறுகிய கால ஆதாயங்களை விட பரந்த தேசிய நலனில் தனது கவனம் நிலைத்திருப்பதாகவும், குறுகிய அரசியல் ஆதாயங்களின் அடிப்படையில் தாம் அரசியல் முடிவுகளை எடுப்பதில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேவைப்படும் போதெல்லாம், நாட்டின் சார்பாக எந்தவொரு முக்கியப் பொறுப்பையும் அல்லது சவாலையும் ஏற்கத் தாம் தயாராக இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷா டி சில்வா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.



